கடந்து வந்த பாதை


மீண்டும் ஒரு ரமளான்: பிறை 5


இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரமளான் மாதம்தான் தற்போது நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கடந்து செல்வதுபோல் இவ்வருடமும் நம்மில் நல்ல மாற்றங்களை அது விளைவிக்காமல் சாதாரணமாகக் கடந்து செல்ல விடுவது அறிவுடைமை ஆகாது.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதலில் ஒரு சுய பரிசோதனை அவசியம். கடந்த வருடமும் இதேபோல் ஒரு ரமளான் ஒவ்வொருவரையும் கடந்து சென்றிருக்கிறது. அப்பொழுது இப்புண்ணிய ரமளானைக் கிடைக்கப் பெற்றவர்களில் எத்தனை பேர் இந்த ரமளானை அடைந்திருக்கின்றனர்? நம்மைச் சுற்றி வாழ்ந்தவர்களுள் எத்தனைபேர் இப்போது இவ்வுலகில் நம்மை விட்டுப் பிரிந்து சென்று விட்டனர்? இருப்பவர்களுள் சென்ற ரமளானைப் பெற்றதன்பின் அதனைத் தொடர்ந்து வந்த இந்த 11 மாதங்களில் என்னென்ன மாற்றங்களைப் பெற்றிருக்கின்றனர்? என்பதனைத் தெரிந்து கொண்டால் மட்டுமே சுயசோதனை முழுமை அடையும். அதற்காக, சென்ற ரமளானிலிருந்து கடந்து வந்த பாதையை நோக்கி ஒரு வேகமான நினைவோட்டம் தேவைப் படுகிறது.
 சென்ற ரமளான் கிடைக்கப் பெற்ற ஒவ்வொருவரும், அந்த ரமளான் மூலம் பெற்ற நல்லருள்களால் சென்ற ரமளான் நம்மீது ஏற்படுத்திய தாக்கத்தினால் நமது தொழுகையில், நமது பிராத்தனையில், வணக்க வழிபாடுகளில், வாழ்க்கை நடைமுறையில் என்ன மாறுதல்களை, எந்த நல்ல அமல்களை, நல்ல விஷயங்களைத் தொடர்ந்து

முறையாக செயல்படுத்தி பயனடைந்து இருக்கின்றோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஏக இறைவனாகிய அல்லாஹ் ஏவியவற்றையும், விலக்கியவற்றையும் முறையாகக் கடைப்பிடித்து அழகாக விளக்கி வாழ்ந்து காட்டிய இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளின்படி நம் ஆன்மீக வாழ்க்கை மற்றும் அன்றாட அலுவல்கள் இருந்தனவா, இருக்கின்றனவா?

எவற்றை எல்லாம் சரிபார்த்து சீர்திருத்திக்கொண்டோம்? எவற்றை எல்லாம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்? எவற்றை எல்லாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக செயல்படுத்தினோம்? எவ்வகை அறிவை-செயல்களை மேம்படுத்திக் கொண்டோம்? எவற்றை எல்லாம், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகவும் மறுமை வெற்றிக்காகவும் வேண்டி கைவிட்டோம்?
 தானும் தன்னைச் சார்ந்த தம் குடும்பத்தினர், அண்டைவீட்டினர், உறவினர்கள், தோழர்கள், தான் அன்றாடம் சந்திக்கக் கூடிய தமது சக ஊழியர்கள், முதலாளிகள், தன் கீழ் - தன் நிர்வாகத்தில் - தன் வீட்டில் பணி புரியும் ஊழியர்கள், தமது வியாபார வாடிக்கையாளர்கள் என்று பலரும் தமது சீர்திருந்திய செயல்பாடுகள் மூலம் பெற்ற பயன்கள் யாவை? போன்ற பல கேள்விகளையும் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றோம்.

- தொடரும் இன்ஷா அல்லாஹ்


0 comments: